நிலுவை
நீ திருப்பித் தரலாம்
மணிக் கூட்டை
கை விளக்கை, கத்தரிக்கோலை
(கன்னிமீசை வெட்ட நீயாய்க்
கேட்டது நினைவு)
கடும்பச்சை வெளிர் நீலக்
கோடன் சேட்டுக்களை
தரலாம் - இன்னமும் மிச்சங்களை
இன்று பல்லி எச்சமாய்ப் போனவற்றை.
உன் முகட்டில் சுவடாய்ப்
பதித்த
என் காட்டுரோஜா உணர்வுகளையும்,
அள்ளியள்ளித் தெளித்து
பூப் பூவாய்ப் பரவிய
திவலைக் குளிர்ச்சியையும்
எப்படி மறுதலிப்பாய்?
எந்த உருவில் திருப்பி அனுப்புவாய்?
கடிதத்திலா
காகிதப் பொட்டலத்திலா?
இதில் நான்
உனக் கிட்ட உதட்டு முத்தங்களையோ
நீ எனக்குள் செலுத்திய
ஆயிரத் தெட்டுக் கோடி விந்தணுக்களையோ
நான் கணக்கில் எடுத்து
சேர்க்கவில்லை என்பது மட்டும்
நமக்குள்
ஒரு புறமாகவே இருக்கட்டும்.
20.10.1995
3 Comments:
Nalla kavithai aazhiyaal... sinna vayasilla kovam vanthavudan nan kudutha chockava thirupi tha endu solra mathiri unarchi parimaruthalgalium vadukalium sulaba yarum yaridam irunthum eduthu kolva mudivathilai.
யப்பா!! செமயா இருக்குங்க கவிதை!
வணக்கம் ஆழியாள்
இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருப்பதால் உங்கள் அனுமதியின்றி எனது தளத்தில் பதிந்துள்ளேன்.
ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி
manaosai.com
Post a Comment
<< Home