தடைதாண்டி
நம் நேற்றைய சந்திப்பு
கடந்த பின் -
நீ -
உன்னை எந்நிமிடமும்
எதிர் கொள்ள
நான் தயாராகவே இருக்கிறேன்.
என் ஆத்துமமும், அறிவும்
முழு உள்ளமும், இந்த ஊனும்
உன்னை நோக்கியபடிக்கு
பனிப்புகையாய் மேலெழுவது
புரிகிறது எனக்கு.
இவ்வுணர்வுகளுக்கு
வேலியிட்டுப் பாத்தி கட்டிப்
பெயரிட நான் தயாரில்லை
நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவெண்டும்.
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என் புரிதலோடு
வா!
ஓன்றாய்க் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்
24.03.1997
5 Comments:
இது வாசிக்கத்தொடங்கிய காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த்த்த்த்த்த்த்து பலருக்கும், இன்றுவரை, அறிமுகப்படுத்தும், நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் கவிதை.
ஆனால் அப்போதிருந்தே ஒரு சின்ன குழப்பம்
||எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என் புரிதலோடு
வா!||
என்பதில் குறி என்பது ஆண்குறியையா, அல்லது "நோக்கம்" என்பதையா குறிக்கிறது?
மயூரன், எழுதும் போது இரு கருத்துக்களும் வர வேண்டும் என்ற நினைப்போடுதான் 'குறி' என்று பாவித்தேன். (மனதுக்குள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுவதாய் கற்பனை வேறு பண்ணிக்கொண்டதும் ஞாபகம் உள்ளது.)
வணக்கம் ஆழியாள்
உங்களைப் பற்றிய முழு விபரங்கள் எதாவது இணையத்தளத்தில்
இருக்கிறதா? உங்கள் கவிதையை எனது தளத்தில் பார்த்த நண்பரொருவர் கேட்டார்.
நானும் அறிய ஆவலாயுள்ளேன்.
யுனைதா
//இவ்வுணர்வுகளுக்கு
வேலியிட்டுப் பாத்தி கட்டிப்
பெயரிட நான் தயாரில்லை//
கவிதை ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு ஆழியாள்! வேறென்ன சொல்றதுன்னு தெரியல.
ரொம்ப நல்லா இருக்கே!
மணி
Post a Comment
<< Home